பிளஸ்-1 மாணவர் ஆற்றில் மூழ்கி பலி
- புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார்.
- பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கரட்டாங்காடு அடுத்துள்ள அன்னாசி கடை வீதியை சேர்ந்தவர் செல்வம். தறி பட்டறை தொழிலாளி.
இவரது மகன் புவனேஷ் (வயது 17). இவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்நிலையில் புவனேசுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கரட்டாங்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக புவனேஷ் மற்றும் அவரது தந்தை செல்வம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் காலை நேரத்தில் குளித்து வந்தனர்.
அதேபோல் இன்று காலை 8 மணிக்கு தந்தை, மகன் 2 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது குளித்து கொண்டிருத்த போது புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார். பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.
இது குறித்து மொடக்கு–றிச்சி தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி மாணவர் புவனேஷ் உடலைதேடினர்.
பின்னர் புவனேஷ் உடலை மீட்டு மொடக்குறிச்சி போலீ–சாரிடம் ஒப்படைத்தனர்.
தந்தை கண் முன்பே மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.