யானை தாக்கி படுகாயம் அடைந்த முதியவருக்கு மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும்-கலெக்டரிடம் கோரிக்கை
- இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கட்டியும் எந்த சிகிச்சையும் செய்யவில்லை.
- அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் வரை செலாவகும் என்றும், மருந்து மற்றும் மருத்துவமனை செலவையும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா காவேரிநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகன் விஜயகுமார், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை கண்ணையன் கடந்த 14-ந் தேதி இரவு 8:30 மணிக்கு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது காவேரிநகரில் இருந்து கோபசந்திரம் செல்லும் சாலையில் யானை துரத்திச் சென்று மிதித்ததில் படுகாயம் அடைந்தார்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு என் தந்தையை பரிசோதனை செய்துவிட்டு, பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கட்டியும் எந்த சிகிச்சையும் செய்யவில்லை.
அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் வரை செலாவகும் என்றும், மருந்து மற்றும் மருத்துவமனை செலவையும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இவ்வளவு பணத்தை எங்களால் கட்ட முடியாத நிலையில் இருப்பதால், என் தந்தையின் முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.