ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்: ஈஷாவில் உற்சாக வரவேற்பு
- மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னையில் இருந்து புறப்பட்டோர் 63 நாயன்மார் திருமேனியுடன் கூடிய தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கோவை:
ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு ஆலாந்துறை முதல் ஈஷா யோக மையம் வரை வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு சிவயாத்திரை எனும் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, மைசூர், நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
இதில் சென்னையில் இருந்து வந்த சிவயாத்திரை குழு அறுபத்து மூவர் திருமேனிகளைத் தாங்கிய ஒரு பிரத்யேக தேரினையும் இழுத்து வந்தனர். ஆதியோகி தேர்கள் அனைத்தும் கலைநயம் மிக்க சிற்பங்களுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மரத்தினால் உருவாக்கப்பட்டவை.
அனைத்து சிவயாத்திரை குழுக்களும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று வந்துசேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் 63 நாயன்மார்களை பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த யாத்திரையில் பங்கேற்ற அனைவரும் மகா சிவராத்திரிக்காக 40 நாள் விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவுசெய்து கொள்வார்கள்.