டைடல் பார்க் யு வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
- வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.
சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர். சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடங்கள் வரை ஆகும். அதே நேரத்தில் பீக் ஹவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் 2-வது யு டர்ன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. மேம்பாலத்தின் மையத்தூண் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யு டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடது புறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் இறங்கிச் செல்ல முடியும்.
இந்நிலையில், டைடல் பார்க் யு வடிவ மேம்பாலத்தை இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்துவைத்தனர்.