தமிழ்நாடு

கல்விக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு.. ரூ.5000 நிதி அனுப்பிய கன்னியகுமாரி சிறுமி

Published On 2025-02-25 21:00 IST   |   Update On 2025-02-25 21:00:00 IST
  • மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை
  • இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம் என்று சிறுமி ஜாக்லின் ரோஸ் பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

இந்நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி ஜாக்லின் ரோஸ் ரூ.5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

"எனது சிறுசேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரத்தை மகிழ்வோடு அனுப்புகிறேன்" என்று சிறுமி பேசியுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய சிறுமி, "வணக்கம் என் பெயர் ஜாக்லின் ரோஸ், நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன். குமாரி மாவட்டத்தை சேர்ந்தவள். அநாதை மொழியான இந்தி மொழி எம் ஆதி மொழியான தமிழை ஆழ்ந்து நிற்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம். தமிழுக்கும் அமுதென்று பெயர். அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழே ஆறாம் தமிழே உயர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? இதோ என்னுடைய சிறு சேமிப்பு நிதியில் இருந்து ரூ. 5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன்" என்று பேசியுள்ளார்.

Tags:    

Similar News