பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒருபோதும் எதிர்கட்சியாக கூட வரமுடியாது- கீ.வீரமணி
- மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி ஆகும்.
மாநிலம் என்றால் மக்கள், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் எப்போதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும்.
எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ வர முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும். மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக வர முடியாது . சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உள்ளது.
100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு,க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.