உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவி நினைவு நாளில் கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2023-04-02 14:32 IST   |   Update On 2023-04-02 14:32:00 IST
  • மனைவி இறந்ததை நினைத்து மன வேதனை அடைந்து வந்தார்.
  • இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமந்தகடவை சேர்ந்தவர் முருகன்(49). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அவரது மனைவி இறந்து விட்டார். முருகன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதற்காக அடிக்கடி கோவை வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கோவை வந்தார். தெற்கு உக்கடம் சிஎம்சி காலனியில் உள்ள தனது உறவினர் மாரிசாமி என்பவரது வீட்டில் தங்கினார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் முருகன் மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு தினம் என்பதால், தனது மனைவியை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார். அவரது இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் அழுது புலம்பியுள்ளார். மேலும் தனது உறவினரான பழனிசாமி என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது ''எனது மனைவி இறந்து ஓராண்டு ஆகி விட்டது. அவரது நினைவை என்னால் மறக்க முடியவில்லை, அவரது நினைவு நாளில் நானும் அவருடன் செல்கிறேன்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது உறவினரும் அவரை தேற்றியுள்ளார்.

இருப்பினும் மனைவியின் நினைவு வாட்டியதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முருகன் உறவினரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உக்கடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News