உள்ளூர் செய்திகள்
வேளாங்கண்ணியில் சிலுவைப்பாதை ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
- பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
இந்த பேராலயத்தில் கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவகாலத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கலந்து கொண்டனர்.