உள்ளூர் செய்திகள்

சாத்தூர் அருகே மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி

Published On 2023-08-13 08:45 GMT   |   Update On 2023-08-13 08:45 GMT
  • விபத்தில் சரவணனின் மனைவி சுகன்யா மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • சுற்றுலா சென்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கெங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் தனது மனைவி சுகன்யா (35), மகன்கள் நவநீப் (6), ஜெகதீஷ் (5) மற்றும் உறவினர் மகேஸ்வரி, அவரது தாயார் சீதாலட்சுமி (63) ஆகியோர் கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் அவர்கள் பயணம் செய்த கார் சாத்தூர் அருகில் உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சாலையில் வந்தது.

அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் சரவணன் காரை நிறுத்த போராடியும் பலனளிக்கவில்லை. முடிவில் அந்த கார் அருகில் உள்ள ஓடைக்குள் புகுந்து மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணனின் மனைவி சுகன்யா மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரை ஓட்டிய சரவணன், உறவினர் மகேஸ்வரி குழந்தைகள் இருவர் என நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானோரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News