டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
- வீடுகளில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
- டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு தேவையான மின்ஓயர்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டது.
திருத்தணி:
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்டது கெங்குசாமி நகர். இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மின்வாரியம், விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின்கம்பத்தில் இருந்து இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அடிக்கடி மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் விவசாய கிணறுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் போது ஒரு மணி நேரம் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் கெங்குசாமி நகர் பகுதிக்கு தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். அதன்படி இரு மாதங்களுக்கு முன் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு மின்கம்பங்கள் நட்டப்பட்டது. டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு தேவையான மின்ஓயர்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.