உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் அதிநவீன பின்னலாடை உற்பத்தி எந்திர கண்காட்சி ஆகஸ்டு மாதம் நடக்கிறது

Published On 2023-05-10 10:15 GMT   |   Update On 2023-05-10 10:15 GMT
  • காலமாற்றத்துக்கு ஏற்ப ஆடை உற்பத்தி எந்திரங்களில் புதுமைகள் புகுத்தப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது.
  • ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

திருப்பூர் :

திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி துறை வளர்ச்சியில், நவீன எந்திரங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், ஆடை தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு, பிரச்னைகளுக்கு தீர்வாக நவீன தொழில்நுட்பங்களுடன் எந்திரங்களை தயாரிக்கின்றன. காலமாற்றத்துக்கு ஏற்ப ஆடை உற்பத்தி எந்திரங்களில் புதுமைகள் புகுத்தப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது.

திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்து பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுத்துவருகிறது நிட்ஷோ கண்காட்சி.அவ்வகையில் 21வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள டாப்லைட் வளாகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் நவீன எந்திரங்களை காட்சிப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இது குறித்து நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:- இந்த ஆண்டுக்கான நிட்ஷோ கண்காட்சி வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 6 மெகா அரங்குகள், 400 ஸ்டால்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அதிநவீன தொழில்நுட்ப நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் உள்பட பின்னலாடை துறை சார்ந்த அனைத்துவகை எந்திரங்களையும் முழு இயக்க நிலையில் இடம்பெற செய்ய உள்ளன.

அதிக எந்திரங்களை காட்சிப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள், 30 ஸ்டால்கள் வரை ஒன்று சேர்த்து வசப்படுத்துகின்றன. இந்த கண்காட்சியில் நிட்டிங் எந்திரங்கள் அதிகளவில் இடம் பெற உள்ளன. போர்ச்சுக்கல் நாட்டு நிறுவனம் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் நவீன டிஜிட்டல் பிரின்டிங் எந்திரத்தை இடம் பெறச் செய்ய உள்ளது.சர்வதேச அளவில், இட்மா ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி, ஜூனில் இத்தாலியில் நடைபெற உள்ளது. அதில், இடம்பெறும் அனைத்து எந்திரங்களும் நிட்ஷோவிலும் வைக்கப்பட உள்ளதால் பின்னலாடை துறையினருக்கு வரப்பிரசாதமாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News