கோப்புபடம்.
12 ரெயில்களில் நவீன பெட்டிகள் இணைப்பு
- பெட்டியிலும் டிஸ்க்பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும் சரியான இடத்தில் நிறுத்த முடியும்.
- சாதாரண ரெயில் பெட்டிகளை விட இப்பெட்டிகளில் கூடுதலாக பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.
திருப்பூர் :
ரெயில் பயணிகள் வசதிக்காக நிஜாமுதீன், பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் அதிவிரைவு ரெயில்களில் எல்.எச்.பி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லி நிஜாமுதீனில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் நிஜாமுதீன் சூப்பர்பாஸ்ட் (22656), பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாட்னா சூப்பர்பாஸ்ட் (22670), மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் (16331) உள்ளிட்ட 12ரெயில்களின் பெட்டிகள் எல்.எச்.பி., எனப்படும் நவீனப்பெட்டிகளாக மாற்றப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
நிஜாமுதீன், பாட்னா ரெயில்களில் இந்தப்பெட்டிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திருவனந்தபுரம் ரெயிலிலும் இணைக்கப்படுகிறது.ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாராகி வரும் எல்.எச்.பி., எனப்படும் அதிநவீன ரெயில் பெட்டிகள் நீண்ட தூர, அதிவிரைவு ரெயில்களுக்கு பொருத்தப்படுகிறது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட இப்பெட்டிகளில் கூடுதலாக பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.
பிற ரெயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சவுகரியமாக இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்க்பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும் சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின்போது ஒரு பெட்டி மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது என்பது குறிப்பிடத்தக்கது.