உள்ளூர் செய்திகள் (District)

சிங்கப்பூரில் உயிரிழந்த வாலிபரின் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது

Published On 2022-09-24 09:46 GMT   |   Update On 2022-09-24 09:46 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜேஷ் (வயது 23).
  • கடந்த வாரம் திருச்சிக்கு வருவதற்காக சிங்கப்பூர் விமான நிலையம் வந்த ராஜேஷ், எதிர்பாராத விதமாக விமானத்தை தவறவிட்டதால் மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

திருச்சி :

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜேஷ் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு சிங்கப்பூரில் பணியாற்றுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி வந்தார்.

அடிக்கடி தன் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் பேசும் போது விரைவில் ஊருக்கு வர இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளதுடன், கடந்த வாரம் திருச்சிக்கு வருவதற்காக சிங்கப்பூர் விமான நிலையம் வந்த ராஜேஷ், எதிர்பாராத விதமாக விமானத்தை தவறவிட்டதால் மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து ராஜேஷ் வீட்டிற்கு தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர் ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ராஜேஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் உடல் இன்று சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டுது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கடியாபட்டி எடுத்துச் செல்லப்பட்டது.




Tags:    

Similar News