இந்தியா

ஒடிசாவில் ஒவ்வொரு நாளும் 3 குழந்தைத் திருமணங்கள்.. அதிர்ச்சியூட்டும் அரசு அறிக்கை!

Published On 2025-03-22 15:28 IST   |   Update On 2025-03-22 15:28:00 IST
  • தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கிறது.
  • பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்கள்.

ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசின் தரவறிக்கை தெரிவிக்கிறது.

அரசு தரவுகளின்படி மட்டுமே, 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களை கொண்ட ஒடிசாவில் அதிகபட்சமாக நபரங்பூரில் 1,347 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன.  

பழங்குடி பழக்கவழக்கங்கள், வரதட்சணை, தொழிலாள வர்க்க குடும்பங்களின் இடம்பெயர்வு மற்றும் தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுப்பதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

குழந்தை திருமணத்தைத் தடுக்க, ஒடிசா அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இது தவிர, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுக்களின் கூட்டங்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடத்தி வருகிறது.

"குழந்தை திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும் . இவ்வகை திருமணங்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது" என்று சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா கூறுகிறார்.

வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு தொடர்ந்து புலம்பெயரும் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், புலம்பெயர்ந்த இடத்தில் அவள்  யாருடனாவது ஓடிப்போய், குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும் பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சி இளவயதிலேயே அவர்களை திருமணம் செய்து தந்துவிடுகின்றனர்

இளவயது திருமணத்துடன், குழந்தைத் தொழிலாளர் முறையின் சவாலையும் ஒடிசா எதிர்கொள்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தொழிலாளர்களாக வேலை செய்த 328 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1986 இன் கீழ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News