பாங்காங்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ரூ4.5 கோடி போதைப்பொருள் கடத்திய மாடல் அழகி-ஒப்பனை கலைஞர் கைது
- கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு வரக் கூடிய விமானங்களில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுகிறது.
இதுபோன்ற கடத்தலை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சில பயணிகள் சட்டவிரோதமாக விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவது நடந்தபடியே இருக்கிறது.
இந்தநிலையில் பாங்காங்கில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் கலப்பின கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானம் இரவில் கொச்சி வந்ததும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மாடல் அழகியான மான்வி சவுத்ரி, டெல்லியை சேர்ந்த ஒப்பனை கலைஞர் சிபத் ஸ்வாந்தி ஆகிய இருவரும் 15 கிலோ கலப்பின கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் 'மேக்கப்' பொருட்கள் இருந்த பெட்டியில் மறைத்து வைத்துகொண்டு வந்துள்ளனர். ஆனால் சுங்கத்துறையினர் அதனை கண்டு பிடித்துவிட்டனர். இதையடுத்து மாடல் அழகி மற்றும் பெண் ஒப்பனை கலைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் கடத்தி கொண்டுவந்த ரூ4.5கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கலப்பின கஞ்சாவை ஒரு கும்பலுக்கு கொடுப்பதற்காக கொச்சிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
மாடல் அழகியிடம் இருந்து கஞ்சாவை வாங்குவதாக கூறிய நபர்கள் யார்? என்று சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.