இந்தியா

டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் எரிந்து சாம்பலான ரூ.11 கோடி- ரூ.26 கோடி கண்டெடுப்பு

Published On 2025-03-21 15:36 IST   |   Update On 2025-03-21 15:36:00 IST
  • டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ஹோலி கொண்டாட்டத்தின் போது நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனால் அவர் டெல்லியில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி மாடிக்கும் பரவியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ஆய்வின்போது அறைகளில் சில பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார்.

அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

இதற்கிடையே, நீதிபதி வீட்டில் எரிந்து பணத்தின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தீயை அணைக்கும் பணியின்போது நீதிபதியின் வீட்டில் கத்தை, கத்தையாக பணம், நகைகளும் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், நீதிபதி வீட்டில் ரூ.11 கோடி பணம் எரிந்து விட்டதாகவும், மேலும் ரூ.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News