வசீகர குரலால் பாடிய வந்தே மாதரம் பாடல்: 7 வயது சிறுமிக்கு கிடார் பரிசளித்த அமித்ஷா
- மிசோரமைச் சேர்ந்த 7 வயது சிறுமி எஸ்தர் நாம்தே வந்தே மாதரம் பாடலை பாடினார்.
- அவரைப் பாராட்டிய அமித்ஷா அந்தச் சிறுமிக்கு கிடார் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார்.
புதுடெல்லி:
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது வசீகர குரலில் வந்தே மாதரம் பாடலை பாடினார். இவரது பெயரில் யூ டியூப் சேனல் இயங்கிவருகிறது. எஸ்தரின் வந்தே மாதரம் ஆல்பத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மிசோரம் முதல் மந்திரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அந்தச் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மிசோரம் மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்தர் நாம்தே என்ற சிறுமி வந்தே மாதரம் பாடலை பாடியதை கேட்டு நெகிழ்ந்துள்ளார்.
அவரைப் பாராட்டிய அமித்ஷா எஸ்தர் நாம்தேவை வரவழைத்து கிடார் ஒன்றையும் பரிசளித்து மகிழ்ந்தார்.
இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பாரதத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. மிசோரமின் அதிசய குழந்தை எஸ்தர் லால்துஹாவ்மி நாம்தேவை அய்ஸ்வாலில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். பாரத மாதா மீதான 7 வயது சிறுமியின் அன்பு அவளது பாடலில் வெளிப்பட்டது. அவர் பாடக் கேட்பது ஒரு மயக்கும் அனுபவமாக மாறியது. அவருக்கு ஒரு கிடார் பரிசாக அளித்து, அற்புதமான எதிர்காலம் அமைய வாழ்த்தினேன் என பதிவிட்டுள்ளார்.