null
விமான நிலையத்தில் ரூ.11 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த பெண் கைது
- பெண்ணின் மீது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து தரை இறங்கியது. இந்த விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளில் அதிகாரிகள் சோதனை போட்டனர். சோதனையில் அவரது உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்
அப்போது அவர் போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கேப்சூல்களை எடுக்க அப்பெண் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அங்கு டாக்டர்கள் இனிமா கொடுத்து அப்பெண்ணின் வயிற்றில் இருந்த 100 கேப்சூல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களில் 1,096 கிராம் எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 கோடியே 96 லட்சம் ஆகும். இதையடுத்து அப்பெண்ணின் மீது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க கடத்தி வந்தார் என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.