ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
- ராகுல் காந்தி மீதான அப்பட்டமான தாக்குதல் அவரது கண்ணியத்தின் மீதான தாக்குதல்.
- எங்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்தனர் என்று காங்கிரஸ் குற்றசாட்டு
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பாஜக எம்.பி முகேஷ் ராஜ்புத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, "நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக எம்.பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளித்த ராகுல் காந்தி, "நடந்த சம்பவம் ஒருவேளை உங்களது கேமராவில் பதிவாகி இருக்கலாம். நான் பாராளுமன்றதிற்குள் நுழைய முயன்றபோது பாஜக எம்.பி.க்கள் என்னை தள்ளி விட்டு மிரட்டல் விடுத்தனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே அவர்களை எதிர்த்துத் தள்ளும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பிக்களை பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் பாஜக எம்.பிக்கள் தடுக்கும் விடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாதிய காங்கிரஸ் எம்.பி.க்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், "ராகுல் காந்தி மீதான அப்பட்டமான தாக்குதல் அவரது கண்ணியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நமது நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். எங்களை பாராளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்தனர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.