இந்தியா

தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யா ராவின் தந்தை பற்றி பரபரப்பு தகவல்கள்

Published On 2025-03-16 11:35 IST   |   Update On 2025-03-16 11:35:00 IST
  • விசாரணை குழு தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
  • ராமசந்திர ராவ் தங்க கடத்தல் விசாரணையை எதிர்கொள்ள கடந்த 14-ந்தேதி முதல் அவருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில காவல்துறை வீட்டு வசதி வாரிய கூடுதல் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தங்க கடத்தல் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் உள்ளனர். இதனால் டி.ஆர்.ஐ, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, மாநில காவல் துறை ஆகியவை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்திக் கொண்டு வரும்போதெல்லாம் அவரை விமான நிலையத்தில் இருந்து பத்திரமாக ஜீப்பில் வீட்டுக்கு அழைத்து சென்று விட்ட போலீஸ்காரர் விசாரணை அதிகாரிகளிடம் டி.ஜி.பி.ராமசந்திர ராவின் நேரடி உத்தரவுகளை பின்பற்றியே வி.ஐ.பி. நுழைவு வாயில் வழியாக அழைத்து வந்ததாக கூறினார். இதனால் ராமசந்திர ராவுக்கும் இந்த தங்க கடத்தலில் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மாநில அரசு சார்பில் இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா மற்றும் விசாரணைக்கு உதவுவதற்காக சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வம்சி கிருஷ்ணா ஆகியோரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை குழு தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ராமசந்திர ராவ் தங்க கடத்தல் விசாரணையை எதிர்கொள்ள கடந்த 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அவருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக அவரை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே டி.ஜி.பி. ராமசந்திர ராவ் பற்றி பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

2014-ம் ஆண்டில் அவர் ஹவாலா ஊழலில் சிக்கிய ரூ.2.07 கோடியை பறிமுதல் செய்து முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதன் அடிப்படையில் மைசூர் எல்லைக்கான காவல் துறை ஐ.ஜி. பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் போலி என்கவுன்டரில் வழக்கில் அவர் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News