இந்தியா

போராட்டத்தின்போது ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகார்

Published On 2024-12-19 15:39 IST   |   Update On 2024-12-19 15:44:00 IST
  • ராகுல் காந்தி என் அருகில் வந்து உரத்த குரலில் கத்தினார்.
  • எனக்கு மிகவும் அருகாமையில் இருந்ததால், ஒரு பெண் உறுப்பினரான நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்.

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி நீல நிற டி-சர்ட் உடன் வந்தார். அப்போது பா.ஜ.க. எம்.பி.க்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது ராகுல் காந்தி பா.ஜ.க. எம்.பி.க்களை தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு எம்.பி.க்கள் காயம் அடைந்தனர். ஒருவர் மண்டை உடைந்தது. மற்றொரு எம்.பி. அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னை உடல்ரீதியாக தாக்கியதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாகாலாந்து பா.ஜ.க. பெண் எம்.பி. பாங்க்னோன் கொன்யாக், போராட்டத்தின்போது ராகுல் காந்தி தன் அருகில் வந்து கத்தினார். அது தனக்கு அசௌகரியமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு அவர் அளித்துள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான் மகர் துவாரின் படிக்கட்டுக்குக் கீழே கையில் ஒரு பதாகையுடன் நின்று கொண்டிருந்தேன். பாதுகாப்புப் பணியாளர்கள் சுற்றி வளைத்து மற்ற கட்சிகளின் எம்.பி.க்கள் நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையை உருவாக்கினர்.

திடீரென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிறக்கட்சி எம்.பி.க்கள் அவர்களுக்காக ஒரு பாதை உருவாக்கப்பட்டிருந்தாலும் என் முன் வந்தார்கள். ராகுல் என் அருகில் வந்து உரத்த குரலில் கத்தினார். மேலும் அவர் எனக்கு மிகவும் அருகாமையில் இருந்ததால், ஒரு பெண் உறுப்பினரான நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்.

இவ்வாறு பெண் எம்.பி. புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், என்னை நானே தற்காத்துக் கொள்ள முடியாது என்று சொல்ல முடியாது. ஆனாலும் அது மிகவும் அநாகரீகமானது. அதனால் நான் பழிவாங்கவில்லை. இருப்பினும் இன்று அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமானவை. நான் சோர்வடைந்துள்ளேன். எந்த ஒரு பெண் உறுப்பினரும் குறிப்பாக என்னைப் போன்ற ஒரு பழங்குடி பெண் உறுப்பினரும் இந்த வழியில் உணரப்படக்கூடாது என மாநிலங்களவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

Tags:    

Similar News