வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா - அசாதுதீன் ஓவைசி எச்சரிக்கை
- தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும்.
- இந்த மசோதாவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரித்து விட்டது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முறைப்படுத்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு, பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்கள் தெரிவித்த 14 திருத்தங்கள் ஏற்றுக் கொண்டு, எதிர்க்கட்சியினரின் 44 திருத்தங்களை நிராகரித்தது. இறுதியாக, 655 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், அதற்குக் குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவும், 11 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். பின்னர், பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அசாதுதீன் ஓவைசி, "அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும். இந்த மசோதாவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரித்து விட்டது"
"நீங்கள் இந்தியாவை 'விக்சித் பாரத்' ஆக்க விரும்புகிறீர்கள், எங்களுக்கு 'விக்சித் பாரத்' வேண்டும். இந்த நாட்டை 80கள் மற்றும் 90களின் முற்பகுதிக்கு மீண்டும் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள், அது உங்கள் பொறுப்பு. இது எனது சொத்து, யாராலும் கொடுக்கப்படவில்லை. அதை நீங்கள் என்னிடமிருந்து பறிக்க முடியாது. வக்பு என்பது எனக்கு ஒரு வழிபாட்டு முறை என்று கூறினார்.