null
வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க சொன்னதும், மாதவிடாய் விடுப்பு அறிவித்ததும் ஒரே நபர் தான்.. எல்&டி நிறுவனர் அசத்தல்
- 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
- மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் சமீபத்தில் 90 மணி நேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சுப்ரமணியன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொறியில் துறையில் பிரபலமான எல்&டி நிறுவனத்தின் சார்பில் மும்பையில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த அறிவிப்பானது நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பிரிவுகளைத் தவிர்த்து, நிறுவனத்தின் முக்கிய பொறியியல் மற்றும் கட்டுமானப் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.
மேலும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், எல்&டி-யின் இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் போக்குடன் ஒத்துப்போகிறது.
ஜொமாடோ, ஸ்விக்கி மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற நிறுவனங்களும், பீகார், கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களும் ஏற்கனவே பெண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்க இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
மாதவிடாய் விடுப்பு குறித்து இந்தியாவில் தற்போது தேசிய சட்டம் இல்லை என்றாலும், இந்த விஷயத்தில் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.