டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்த 'மினி' கெஜ்ரிவால்
- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்நிலையில், 'மினி அரவிந்த் கெஜ்ரிவால்' என்ற சிறுவன் டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளான்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான ராகுல் தோமர், தனது மகன் அவ்யன் தோமருடன் வந்திருந்தார். அப்போது அவ்யன் தோமர் நீல நிற ஸ்வெட்டருடன் வெள்ளை காலர் மற்றும் பச்சை நிற பஃப் ஜாக்கெட் அணிந்திருந்தான். மேலும் கெஜ்ரிவாலை போலவே தோற்றமளிக்க அவர் போலவே கண்ணாடி மற்றும் மீசையை அணிந்திருந்தான்.
இந்த குளிர்காலத்தில் கெஜ்ரிவால் பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது இதே போன்ற உடைகளை தான் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.