இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2025-02-08 08:08 IST   |   Update On 2025-02-08 08:08:00 IST
  • ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
  • பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. டெல்லியில் 19 மையங்களில் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 5,000 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்சியை பிடிப்பது யார் என்று சில மணி நேரங்களில் தெரிய வரும்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News