இந்தியா (National)

அன்பு நண்பரை இழந்துவிட்டேன்: முகேஷ் அம்பானி உருக்கம்

Published On 2024-10-09 22:42 GMT   |   Update On 2024-10-09 22:42 GMT
  • தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி:

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முகேஷ் அம்பானி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

ரத்தன் டாடாவின் மறைவு இந்தியா மற்றும் இந்திய தொழில்துறைக்கு மிகுந்த துக்கத்தை அளிக்கிறது. அவரது மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் இழப்பு.

பர்சனல் அளவில் ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த துக்கத்தை அளித்துள்ளது. ஒரு அன்பான நண்பரை இழந்துள்ளேன்.

அவருடனான பல சந்திப்புகள் தனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளது. அவரது உன்னதமான குணம் மற்றும் நல்ல மனிதாபிமானம் அவரின் மீதான மரியாதை அதிகரித்தது.

எதிர்காலத்தை கணித்து நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் ஒரு முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் மிகப்பெரிய நன்கொடையாளர்.

எப்போதும் சமுதாயத்தின் மேன்மையில் அவர் அதிகப்படியான கவனம் செலுத்தினார்.

ரத்தன் டாடாவின் மறைவால் இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மற்றும் தாயுள்ளம் கொண்ட ஒருவரை இழந்துள்ளது.

அவர் இந்தியாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன், உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News