இந்தியா

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள்: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

Published On 2025-02-07 17:23 IST   |   Update On 2025-02-07 17:23:00 IST
  • சவுதி அரேபியாவில் உள்ள ஜெயில்களில் 2,633 இந்திய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 266 பேர், இலங்கையில் உள்ள சிறைகளில் 98 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 86 நாடுகளில் உள்ள சிறைகளில் 10,152 இந்தியர்கள் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஜெயில்களில் 2,633 இந்திய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறைகளில் 2,518 இந்திய கைதிகள் உள்ளனர்.

நேபாளத்தில் உள்ள சிறைகளில் 1,317 இந்திய கைதிகள் உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 266 இந்தியர்களும், இலங்கையில் உள்ள சிறைகளில் 98 இந்தியர்களும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

பிபா உலகக் கோப்பைக்குப் பிறகு கத்தார் சிறையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கத்தார் சிறையில் 611 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். தனிமனித உரிமை சட்டம் காரணத்தினால் அவர்களின் சம்மதம் இல்லாமல் கத்தார் அரசு தரவுகளை வெளியிடுவதில்லை. இதனால் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News