BSNL மற்றும் MTNL சொத்துக்களை விற்று ரூ.16,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு
- நிலுவையில் உள்ள MTNL நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.31,944.51 கோடி ஆகும்.
- MTNL இன் செயல்பாடுகள் முறையாக BSNL உடன் 2025 ஜனவரி 1 முதல் இணைக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் (MTNL) இன் சொத்துக்களை விற்று நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
MTNL இன் செயல்பாடுகள் முறையாக BSNL உடன் 2025 ஜனவரி 1 முதல் இணைக்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
MTNL இன் கடன் நிலைமை மிக மோசமாக உள்ளது. 2024 ஆகஸ்ட் 30, நிலவரப்படி, நிலுவையில் உள்ள நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.31,944.51 கோடி ஆகும். இந்தியன் வங்கியில் ரூ. 1,000 கோடி கடனை MTNL திருப்பி செலுத்தவேண்டும் மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 5,726.29 கடன் தவணைகளையும் கட்ட வேண்டும்.
ஆகவே BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து ரூ.16,000 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் திட்டம் போட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேசிய நில நாணய மயமாக்கல் கழகம் மற்றும் மத்திய பொது நிறுவனங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.