டெல்லியில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்- ராகுல் காந்தி பங்கேற்பு
- தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது.
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
புதுடெல்லி:
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. இது குறித்து மத்திய கல்வித்துறை மந்திரிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் பிப்ரவரி 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.