கேரளாவில் தந்தையை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர்
- போலீஸ் நிலையத்தில் பிரிஜில் சரண் அடைந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சாருவிளாகம் வெள்ளரடை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 70). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் பிரிஜில் (29) சீனாவில் மருத்துவம் படித்து வந்தார். அதற்கான தேர்வு எழுதிய போதும் அதில் தேர்ச்சி பெறவில்லை. இதனை தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
வீட்டில் அவர் பெற்றோருடன் தங்கியிருந்தார். நேற்று இரவு இவர்களது வீட்டில் இருந்து ஜோசின் மனைவி சுஷாமா திடீரென பயங்கரமாக அலறினார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் ஜோஸ் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
சுஷாமா மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மகன் பிரிஜில் தான் தந்தையை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை தேடிய நிலையில், போலீஸ் நிலையத்தில் பிரிஜில் சரண் அடைந்தார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னை சுதந்திரமாக வாழ தந்தை அனுமதிக்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் அவரை கொலை செய்தேன் என தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.