இந்தியா

பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் முன்னிலையில் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை

Published On 2025-03-01 02:28 IST   |   Update On 2025-03-01 02:28:00 IST
  • ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ராஜ்காட் மகாத்மா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
  • இந்தப் பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி:

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய தலைமையில் ஒன்றியத்தின் 26 ஆணையாளர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, டெல்லி வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், அவர் டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவருடைய இந்தப் பயணம் அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் இடையே, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று நீண்டகாலத்திற்கு கையெழுத்திடப்படாமல் உள்ளது. இதனை விரைவுப்படுத்தும் நோக்கில் இருதரப்பும் முனைப்பில் உள்ளன. இந்தப் பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், உர்சுலா வான் டெர் லெயன் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

அதன்பின், பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய குழுவினர் மற்றும் இந்திய அதிகாரிகள் தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடந்த உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், வெளிவிவகார மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிற மந்திரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News