உடல் பருமனுக்கு எதிராக விழிப்புணர்வு- உமர் அப்துல்லா, மோகன்லாலை பரிந்துரைத்த பிரதமர் மோடி
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேரை பரிந்துரை செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
- உணவில் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகப்படுத்த இந்த 10 பேரை பரிந்துரைத்து உள்ளேன்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பேசும்போது, "உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் வலுவான குரலை எழுப்பும் வகையில், உணவில் எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்துமாறும், எண்ணெய் உட்கொள்ளலை 10 சதவீதம் குறைப்பதன் சவாலை 10 பேருக்குக் கடத்துமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவுவதற்காக ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் நடிகர்கள் மோகன்லால், மாதவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேரை பரிந்துரை செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
"உடல்பருமனுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், உணவில் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் நான் இந்த 10 பேரை பரிந்துரைத்து உள்ளேன். இவர்களின் பங்களிப்பால், உடல்பருமனுக்கு எதிரான இயக்கம் விரிவடையும்" என்று மோடி எக்ஸ் வலைத்தள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
போஜ்புரி பாடகர்-நடிகர் நிராஹுவா, துப்பாக்கிச் சூடு சாம்பியன் மனு பாக்கர், பளுதூக்கும் வீரர் மீராபாய் சானு, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் எம்.பி. சுதா மூர்த்தி ஆகியோர் மோடியால் பரிந்துரைக்கப்பட்ட மற்ற நபர்கள் ஆவர்.