ஒரு பிரதேசத்தை கைப்பற்ற அதன் 'மொழி'யை அழிப்பதே சிறந்த வழி - ஜெகதீப் தன்கர்
- நமது கலாச்சாரத்தையும் மொழியையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை.
- காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது.
ஒரு பிரதேசத்தை கைப்பற்ற அதன் கலாச்சாரத்தை தகர்த்து அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியுள்ளார்.
சமீபத்தில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், ஒரு நாடு அதன் கலாச்சார செல்வம் மற்றும் அதன் கலாச்சார நெறிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது, இந்த விஷயத்தில் இந்தியா தனித்துவமானது, ஏனெனில் உலகில் எந்த நாடும் நம்மை ஒப்பிட முடியாது.
நமது கலாச்சாரத்தையும் மொழிகளையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை. அதுவே நமது வரையறுக்கப்பட்ட கடமை. இலக்கியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கை கொடுப்பதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நிகழ்ந்த படையெடுப்புகளைக் குறிப்பிட்டு பேசிய ஜகதீப், ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை தகர்த்து முறியடித்து அதன் மொழியை அழிப்பதாகும்.
அவர்கள் நம் மொழி, நம் கலாச்சாரம், நம் மத இடங்களை கைப்பற்ற மிகவும் அடக்குமுறை கொண்ட கொடூரமானவர்களாக இருந்தனர்.
காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது. நம்மை காயப்படுத்த, அவர்கள் நம் மத இடத்திற்கு மேலாக தங்கள் இடத்தை உருவாக்கினர். நம் மொழிகளை மட்டுப்படுத்தினர். நம் மொழி செழிக்கவில்லை என்றால், நம் வரலாறும் செழிக்காது என்று தெரிவித்தார்.