விக்கிற விலைவாசிக்கு.. ரோட்டில் கொட்டிய தக்காளிகளை இரவு முழுக்க காவல் காத்த உ.பி. போலீஸ் - வீடியோ
- குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.
- இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார்.
சாலையில் கிடந்த தக்காளிகளுக்கு இரவு முழுவதும் உ.பி. போலீஸ் காவல் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதி அருகே நெடுஞ்சாலையில் குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.
இதனால் வண்டியிலிருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும் இரவு நேரம் என்பதால் சாலையில் கிடந்த தக்காளிகளைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விடியும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்கப்படும் நிலையில் தக்காளிகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது. எனவே சாலையிலேயே தக்காளிகளுக்கு இரவு முழுவதும் போலீசார் காவலாக நின்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.