தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கர்நாடகா சார்பில் டி.கே. சிவகுமார் பங்கேற்பார் - சித்தராமையா
- சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்த்தில், "மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது.
மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார். கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.