குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்த்து பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டேன்: திக்விஜய் சிங்
- குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பாஜக-வுக்கு வேலைப்பார்ப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.
- அவ்வாறு பணியாற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருந்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி பேசினார். அப்போது, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்காக பணியாற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருக்கும்போது, குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்திற்காக சென்றேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச வேண்டாம். இந்துக்கள் கோப்படுவார்கள் என என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என பழைய சம்பவத்தை திக்விஜய் சிங் நினைவு கூர்ந்துார்.
ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை பிரதிநிதித்துவம் படுத்துவதில்லை என திக்விஜய் சிங் கூறினார்.
இது தொடர்பாக திக்விஜய் கூறுகையில் "இந்து மத குரு சங்கராச்சாரியார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிறுவப்பட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளார். அது இன்னும் நடைமுறையில் உள்ளது.
அவர்களில் எந்த சங்கராச்சாரியார் இன்று பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார்?. பாஜக என்பது மதத்தின் பெயரால் மக்களை கொள்ளையடித்து அதிகாரத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுரண்டல் சக்திகளின் ஒரு குழு ஆகும்" என்றார்.