கிரிக்கெட் (Cricket)

ஏன் ஓய்வு பெற வேண்டும்.. ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித்.. டிவில்லியர்ஸ் ஆதரவு

Published On 2025-03-13 20:10 IST   |   Update On 2025-03-13 20:10:00 IST
  • ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும்.
  • ரோகித் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார்.

மும்பை:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தொடர் நிறைவடைந்தவுடன் ரோகித் சர்மா, ஓய்வு பெற்று விடுவார் என யூகங்கள் கிளம்பின. ஆனால் கோப்பையை வென்றதும் பேட்டி அளித்த 37 வயதான ரோகித் சர்மா, இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை என இது குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் 37 வயதானாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ள ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒருநாள் கிரிக்கெட்டில் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும்போது ரோகித் சர்மாவின் வெற்றி சராசரி விகிதத்தை பாருங்கள். அது கிட்டத்தட்ட 74 சதவீதம். இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்த அவர் உச்சகட்ட அழுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கான நல்ல அடித்தளத்தைக் கொடுத்தார். எனவே ரோகித் ஓய்வு பெறுவதற்கும் விமர்சனங்களை சந்திக்கவும் காரணம் இல்லை. அதை அவருடைய சாதனைகள் பேசுகின்றன.

இது போக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார். இதற்கு முன் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் மெதுவாக விளையாடிய அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. ஆனால் 2022-க்குப்பின் 115 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவர் சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். அப்படி நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை மாற்றுவது சிறந்த விஷயம் நீங்கள் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டு முன்னேறலாம்.

ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும். அவரது பயணம் எப்போதும் சீராக இருப்பதில்லை. வெவ்வேறு பார்மட்டில் வெவ்வேறு பார்மை கொண்டிருக்கும். அவர் மேடு பள்ளங்களைக் கடந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித்.

என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

Tags:    

Similar News