ஐபிஎல் 2025 சீசன்: ஐந்து புது கேப்டன்கள்- போட்டிக்கு தயாராகும் அணிகள்
- கடைசி அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று கேப்டன் யார் என்பதை அறிவித்துள்ளது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன் கில்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பேட் கம்மின்ஸ்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய ஐந்து அணிகள் கேப்டன்களை தக்கவைத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தக்கவைக்கவில்லை.
மெகா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணிகளாக கேப்டன்களை அறிவித்து வந்தது. இறுதியான இன்று காலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது.
இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது.
இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். அக்சார் பட்டேல் பகுதி நேர கேப்டனாக பணியாற்றியுள்ளார். தற்போது முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.
10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டும் வெளிநாட்டு வீரரை கேப்டனாக கொண்டுள்ளது.