கிரிக்கெட் (Cricket)

தோல்விக்கு என்ன காரணம்? அதை சொல்ல விரும்பவில்லை - பாக். கேப்டன் முகமது ரிஸ்வான்

Published On 2025-02-28 11:47 IST   |   Update On 2025-02-28 11:47:00 IST
  • வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களை பெற வேண்டும்.
  • சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்.

சாம்பின்ஸ் டிராபி 2025 தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

சொந்த மண்ணில் நடந்த போட்டி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாததால் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் அணியின் தோல்விக்கு அதை காரணமாக சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம். எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சைம் அயூப், ஃபகர் ஜமான் ஆகியோர் காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தியது."

"ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட சைம் அயூப் காயமடைந்ததால் விலகினார். இது அணியின் சமநிலையை பாதித்தது. ஆனால் தோல்விக்கு அதை காரணமாக சொல்ல விரும்பவில்லை."

"நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களை பெற வேண்டும். கடந்த சில போட்டிகளில் நாங்கள் தவறுகளை செய்துள்ளோம். அதிலிருந்து கற்றுக்கொண்டு அதை சரிசெய்வோம் என்று நம்புகிறோம். நாங்கள் அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறோம். அங்கு சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

Tags:    

Similar News