முதல்வர் ஸ்டாலின்
மத அரசியலுக்கு எதிரானதுதான் திராவிட மாடல் ஆட்சி - கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூரில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
- அப்போது பேசிய அவர் அண்ணா வழியைப் பின்பற்றி திராவிட மாடல் அரசு நடந்து வருகிறது என்றார்.
சென்னை:
கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:
திராவிட மாடல் அரசு என்பது எல்லா மதத்திற்குமானது. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு எதிரான அரசுதான் இது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற வழியில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அண்ணா வழியைப் பின்பற்றி திராவிட மாடல் அரசு நடந்து வருகிறது. சாதி, மதம், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலைநாட்டி ஏழைகளை ஏமாற்ற திராவிட மாடல் அரசு அனுமதிக்காது.
ஒரு துளி கண்ணீர் ஏழைகளிடம் இருந்து வெளிப்பட்டாலும் அதனை துடைக்கக் கூடிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கம்.
சமூக நீதியை பேணி, மனித நேயத்தை வளர்ப்பதே திராவிடத்தின் கொள்கை என தெரிவித்தார்.