ஆன்லைன் பண மோசடி இழப்புக்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்- நுகர்வோர் கோர்ட் உத்தரவு
- மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
- பணத்தை அந்த கும்பல் அபகரித்ததும் தெரியவந்தது.
சென்னை:
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் மதுமிதா. இவர், சென்னை வடக்கு நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 21.7.2023 அன்று எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது, மறுமுனையில் பேசிய நபர், மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாகவும், நான் அனுப்பிய பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், எனது ஆதார் அட்டை மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சட்டவிரோதமான பண பரிவர்த்தனை எதுவும் நடந்துள்ளதா? என பார்க்கும்படியும் கூறினார்.
பின்னர், சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனியார் வங்கி கணக்கு விவரங்களை கேட்ட அவர்கள், எனது வங்கி கணக்கில் இருந்து 19 லட்சத்து 91 ஆயிரத்து 687 ரூபாய் பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். எனது வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த பின்பு, இந்த பணம் திரும்ப அனுப்பப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர், செல்போன் அழைப்பை துண்டித்தனர்.
இதன்பின்பு தான், மோசடி கும்பல் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனது வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 81 ஆயிரத்து 366 மட்டுமே இருந்தது. இந்த மோசடி கும்பல் என்னிடம் பேசி கொண்டிருந்தபோதே, நான் தனிநபர் கடன் கேட்பது போன்று மோசடி கும்பல் விண்ணப்பம் அனுப்பி உள்ளது.
வங்கி நிர்வாகம் என்னிடம் எந்தவித உறுதியும் செய்யாமல், ரூ.15 லட்சத்தை வங்கி கணக்கில் வரவு வைத்ததும், இந்த பணத்தையும் அந்த கும்பல் அபகரித்ததும் தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து வங்கி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தேன். மோசடி கும்பலின் வங்கி கணக்கு தெரிந்த போதும் அதனை முடக்கம் செய்யவோ அல்லது பணத்தை திரும்ப பெற்றுத்தரவோ வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எனது வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் அபகரித்த பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த ஆணையம், 'மனுதாரர் தான் தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்தாரா? என்பதை உறுதி செய்யாமல் வங்கி நிர்வாகம் கடன் அனுமதித்தது சேவை குறைபாடு ஆகும். எனவே, மனுதாரருக்கு அனுமதிக்கப்பட்ட 15 லட்சத்து 4 ஆயிரத்து 101 ரூபாய் கடன் ரத்து செய்யப்படுகிறது.
மோசடி கும்பலின் வங்கி கணக்கு விவரம் தெரிந்த போதும் பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனுதாரரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் அபகரித்த ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 586-ஐ மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும்.
சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.