தமிழ்நாடு

கடந்த ஓராண்டுக்குப் பிறகு இன்று அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது

Published On 2023-12-09 10:31 IST   |   Update On 2023-12-09 10:31:00 IST
  • வரட்டு பள்ளம் அணைப்பகுதிகளில் பொழிந்த மழையினால் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி இன்று காலை 6 மணி அளவில் நிறைந்து 25 கன அடி உபரி நீர்வெளியேறி வருகிறது.
  • ஓடையின் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றார்கள்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை சுற்று பகுதியில் பொழிய கூடிய மழை நீரானது தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் நீராகவும், விவசாயிகளின் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பர்கூர் மலை மற்றும் வரட்டு பள்ளம் அணைப்பகுதிகளில் பொழிந்த மழையினால் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி இன்று காலை 6 மணி அளவில் நிறைந்து 25 கன அடி உபரி நீர்வெளியேறி வருகிறது.

மேலும் இன்னும் தொடர்ந்து 5 நாட்கள் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் வரட்டு பள்ளம் அணை பகுதி ஒட்டியுள்ள கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாஜலம், பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

மேலும் அந்தியூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறு ப்பு) நாகேஷ், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் ஓடையின் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் வெளுத்து வாங்கிய மழையால் அணை கிடுகிடுவென 2.25அடி நீர் உயர்ந்தது.

அது போன்று இரவு நேரங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் சங்கராபாளையம், கெட்டி சமுத்திரம், எண்ணமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

Tags:    

Similar News