தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிகாகோ பயணம்

Published On 2024-09-01 06:51 GMT   |   Update On 2024-09-01 06:51 GMT
  • பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
  • பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார்.

அங்குள்ள சான்பிரான்ஸ் சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ், ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கடந்த 30-ந்தேதி பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்கால திறன் ஆகியவற்றில் ஏ.ஐ. கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

சான்பிரான்சிஸ்கோ நகரில் 5 நாட்கள் தங்கி இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (2-ந்தேதி) சிகாகோ நகரம் செல்கிறார். அங்கு அவருக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.

அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

Tags:    

Similar News