தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்

Published On 2023-10-07 10:59 IST   |   Update On 2023-10-07 10:59:00 IST
  • கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
  • அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்து விட்டது.

இந்த நிலையில் காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் அந்த தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதில் இந்த ஆண்டில் 2-வது முறையாக கிருஷ்ண ராஜசாகர் அணை 100 அடியை எட்டியது.

ஆனாலும் அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 154 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 8.4 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. நீர்வரத்து இேத அளவில் இருந்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் இதே நிலையில் நீடித்தால் மேட்டூர்அணையில் இருந்து இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News