தமிழ்நாடு (Tamil Nadu)

நெல்லை மாவட்டத்தில் கோடை மழையால் 51 அடியாக உயர்ந்த பாபநாசம் அணை நீர் மட்டம்

Published On 2024-05-20 05:33 GMT   |   Update On 2024-05-20 05:33 GMT
  • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 67.45 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 85. 40 அடியாக நீர் இருப்பு உள்ளது.
  • மாவட்டத்திலும் அதே போல் வறண்ட கால நிலை இருந்தாலும் அவ்வப்போது சற்று இதமான காற்று வீசியது.‌

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ள நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று மதியத்தில் இருந்து இன்று பிற்பகல் வரையிலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் இன்று காலை நிலவரப்படி மழை எதுவும் பெய்யவில்லை. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.40 அடியாகவும் இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 62.86 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 176 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 254 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 67.45 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 85. 40 அடியாக நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் நீர்மட்டம் இன்று 51.30 அடியாக இருந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் 25 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதியளவு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மாநகரப் பகுதியில் வறண்ட வானிலையே காணப்பட்டது. மாவட்டத்திலும் அதே போல் வறண்ட கால நிலை இருந்தாலும் அவ்வப்போது சற்று இதமான காற்று வீசியது. வெயில் தாக்கம் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்தாலும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கணிசமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் இதமான காற்று வீசி வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் நிம்மதியடைந்துள்ளனர். கருப்பா நதி அணையின் நீர்டிப்பு பகுதியில் 4.5 மில்லி மீட்டரும், அடவிநயினார் பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. விளாத்திகுளத்தில் 40 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 31 மில்லி மீட்டரும் மழை பெய்தது. எட்டயபுரம், வைப்பாறு, சூரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாத்தான் குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன் பட்டினத்தில் வறண்ட வானிலையே நிலவியது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் அடித்தது.

Tags:    

Similar News