சொந்த கட்சி நிர்வாகிகளே காவல் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது தான் திராவிட மாடல்- பிரேமலதா பேட்டி
- பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு.
- ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் அமைச்சர் நாசர் மற்றும் தமிழக அரசுதான் விவசாயிகள் பிரரச்சினையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி தற்போது அனிதா பெயரில் மருத்துவமனையில் பெயர் பலகை திறந்தால் போதும் என்று நினைக்கிறார். இது கண்டனத்துக்குரியது.
அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு ஆதரவு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ரத்து செய்ய முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பாமல் தமிழக அரசு நீட் பிரச்சினையில் நிலையான, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட பயந்து பல கட்சிகள் இருந்தபோது தைரியமாக தே.மு.தி.க. போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தலே கிடையாது. இதுவரை தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் அளவிற்க்கு முறைகேடுகள் நடந்துள்ளது. தே.மு.தி.க. எவ்வளவோ இடைத்தேர்தலை சந்தித்துள்ளது.
ஆனால் இதுபோன்ற இடைத்தேர்தலை நாங்கள் பார்த்தது இல்லை. மக்களை ஆடு, மாடுகள் போல பட்டியில் அடைத்து வைத்து கோடி கோடியாக செலவழித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர்.
தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்படும்போது மனது வருத்தமாக உள்ளது. நான் போட்டியிடவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறியபோதும் வம்படியாக இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளது தி.மு.க.
ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான். தேர்தல் ஆணையம் உள்ளதா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.
சொந்த கட்சி நிர்வாகிகளே காவல் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்.பி. வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடல். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா? இதற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.
ஏற்கனவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியதுபோல் தற்போது புதுச்சேரியில் பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வைப்புத்தொகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அமைச்சர்கள் பலரும் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்கள் நடவடிக்கை உள்ளது, இதுதான் திராவிட மாடல்.
பேராசிரியர் ஒருவரை நடுரோட்டில் அடித்து இழுத்துச் சென்று அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்லும் சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க., பா.ஜ.க. விமர்சனம் செய்து கொள்வது இரண்டு கட்சியின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.
பன்னிரண்டாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுத வராதது குறித்து, அதுவும் தமிழ் தேர்வு எழுத வராதது குறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும், அரசும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவது போல், மாணவர்கள் மத்தியில் தேர்வு குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவதால் தான் தற்போது 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது வராமல் உள்ளனர். அரசு 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.