தமிழ்நாடு

பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை- ராதாகிருஷ்ணன்

Published On 2022-12-31 13:00 IST   |   Update On 2022-12-31 13:00:00 IST
  • மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம்.
  • கரும்பு கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட கலெகடர் லலிதா தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதா ஆகியோர் பொருட்களின தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள செங்கரும்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகள், கடந்தமாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம். எனவே கூடுதல் விலைக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனை கேட்டுக்கொண்ட அவர் விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்பை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.ஆய்வில் மயிலாடுதுறை, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்த ரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,

கரும்பு கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட கலெகடர் லலிதா தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லலிதா கூறுகையில், கடந்த மாதம் அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 13500 நிவாரணம் அறிவிக்கபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 43.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த தொகை அடுத்த வாரம் வந்து சேரும்.உடனே பொங்களுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கபடும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News