சென்னையில் 14 போக்குவரத்து சந்திப்புகளில் நிழல் தரும் பசுமை பந்தல்கள்
- சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
- சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
கோடை காலம் தொடங்கியதையடுத்து தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
பொதுவாக கத்திரி வெயில் காலத்தில்தான் வெப்பம் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.
பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கேழ்வரகு கூழ், கம்பங் கூழ், மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்ற வற்றை பருகி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகத்தை தணித்து வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வெயில் அதிகமாக இருக்கக் கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளன.
சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.
அதில் உயரம் அதிகமாக இருந்த காரணத்தால் கிழிய கூடிய சூழல் உருவான காரணத்தால் இந்த ஆண்டு அதன் உயரம் குறைக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.