'சந்திராயன் 3' திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அரசுப் பொறுப்பு...
- உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
- உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களை வகுப்பது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது, பேராசியர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவது போன்ற பணிகளில் உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
இந்தநிலையில், உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் பன்னீர் செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்ட இயக்குனராக இருந்தபோது, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.