தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் ஆய்வு பணிக்கு வந்தனர்.

முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு ஆய்வு

Published On 2025-03-22 10:36 IST   |   Update On 2025-03-22 10:36:00 IST
  • இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.
  • தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும்.

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

மேலும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவின் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே புதிய கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள கேரள பிரதிநிதிகளை நீக்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று லோயர்கேம்பில் இருந்து பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்கள் எதிர்ப்பையும் மீறி புதிய கண்காணிப்பு குழு அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழக விவசாயிகள் தடையை மீறி முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்குள் சென்று போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி புதிய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இன்று முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வந்தனர். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தபிறகு தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார்களா? என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தையும் மீறி புதிய கண்காணிப்பு குழு முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு வந்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News